Archives: ஜனவரி 2019

தேசங்களின் மத்தியில் நீதிமான்கள்

இஸ்ரவேல் தேசத்தில் யாட் வாஷேம் என்ற இடத்திலுள்ள, ஓர் இனப்படுகொலை அழிவைக் குறித்த பழங்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட ஓர் அரங்கிற்குச் சென்றிருந்தோம். என்னுடைய கணவனும் நானும் தேசங்களின் மத்தியில் நீதிமான்களாகத் திகழ்ந்த மக்களை கவுரவிக்கும் அந்த இடத்தைச் சுற்றி வந்தோம். யூத மக்களின் பேரழிவின் போது, தங்கள் உயிரையும் பணயம் வைத்துச் சில யூதர்களைக் காப்பாற்றியவர்களின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டபோது, நெதர்லாந்திலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரைச் சந்தித்தோம். அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி தன்னுயை முன்னோர்களின் பெயர்களை அங்கிருந்த ஒரு பெயர் பட்டியலில் தேடிக் கொண்டிருந்தாள். அவர்களுடைய குடும்பத்தைப் பற்றிய கதையை ஆர்வமிகுதியால் கேட்டோம்.

தடையை மீறி செயல்பட்ட மக்களின் வரிசையிலிருந்த அந்தப் பெண்ணின் தாத்தாவும், பாட்டியும் போதகர் பயட்டரும், ஏட்ரியானா மியூல்லரும் 1943-1945 ஆம் ஆண்டுகளில் இரண்டு வயது நிரம்பிய ஒரு யூத பையனை, எட்டு குழந்தைகளடங்கிய தங்கள் குடும்பமெனக் கூறித் கடத்தினர்.

அந்தக் கதையைக் கேட்டு அசைக்கப்பட்டவர்களாக நாங்கள், “அந்த சிறுபையன் பிழைத்தானா?" என வினவினோம். அந்தக் குழுவிலிருந்து ஒரு முதியவர் முன்னால் வந்து, “நான் தான் அந்தப் பையன்!" என அறிவித்தார்.

யூத ஜனங்களுக்குச் சாதகமாக அநேகர் தைரியமாகச் செயல்பட்டது எனக்கு எஸ்தர் ராஜாத்தியை நினைவுபடுத்தியது. ஏறத்தாழ கி.மு. 475 ஆம் அண்டில், சகல யூதரையும் கொன்று அழித்துப் போடும்படி அகாஸ்வேரு ராஜாவால் எழுதப்பட்ட கட்டளையை எஸ்தர் ராஜாத்தி அறிந்திருந்தும், தான் தன்னுடைய பூர்வீகத்தை வெளிப்படுத்தாமையால் தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணியிருக்கலாம். ஆனாலும் அவள் தன் உயிரையும் பணயம் வைத்து செயல்படும்படி தூண்டப்பட்டாள். அவளுடைய உறவினன் அவளிடம், “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்" என்று சொல்லச் சொன்னான் (எஸ். 4:14). நாமும் ஒருவேளை இத்தகைய முடிவுகளை எடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்படாவிடினும், ஓர் அநீத செயலுக்கு எதிராகப் பேசும்படி சந்தர்ப்பம் நமக்களிக்கப்படலாம், அல்லது அதைக் கண்டும் அமைதியாகப் போய்விடலாம். ஆனால், பிரச்சனையிலிருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாயா? அல்லது திரும்பிப் போய் விடுகின்றாயா? செயல்படும்படி தேவன் நமக்கு தைரியத்தைத் தருவாராக.

பனி வெடிப்பிலிருந்து விடுதலை

ஒரு பனிப்பொழிவு நாளில் என்னுடைய குழந்தைகள் பனிச்சறுக்கி விளையாட அனுமதிக்கும்படி என்னை வற்புறுத்தினர். அந்நாளின் வெப்பநிலை பாரன்ஹீட் வெப்பநிலை மானியின் பூஜியத்தினருகிலேயே அசைந்து கொண்டிருந்தது. பனித்துகள்கள் எங்கள் ஜன்னல்களை மோதிக் கொண்டிருந்தன. நான் மீண்டும் சிந்தனை செய்து பார்த்து சரியெனக் கூறி, அவர்களை நன்கு கம்பளி உடைகளால் பொதிந்து கொண்டு, சேர்ந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டேன்.

அன்பின் மிகுதியால் நான் அந்த கட்டளையைக் கொடுத்தேன். எனவே என்னுடைய குழந்தைகள் பனிஉறைதலில் விறைத்துப்போகாமல் விளையாட முடியும். சங்கீதம் 119ஐ எழுதியவரும், தேவன் கொண்டுள்ள அத்தகைய நல்லெண்ணத்தை உணர்ந்தவராக இரு அடுத்தடுத்த வசனங்களை எதிரெதிர் அர்த்தமுடையவைகளாக எழுதியுள்ளார். “நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக் கொள்ளுவேன். நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால் விசாலத்திலே நடப்பேன்" (வச. 44-45). இதில் எப்படி சங்கீதக்காரன், சுதந்தரமான வாழ்வையும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கின்ற ஆவிக்குரிய வாழ்வையும் இணைத்துக் குறிப்பிடுகின்றார்?

தேவனுடைய ஞானமுள்ள கட்டளைகளை நாம் கடைபிடித்து நடக்கும்போது, நாம் இவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கலாமே என்ற குற்றஉணர்வோடு வாழ்கின்ற பின்விளைவைத் தவிர்க்க முடிகிறது. நாமும் தவறிழைத்த கனத்தோடும் வேதனையோடுமல்ல, நாம் சுதந்திரமாக நம்முடைய வாழ்வை அனுபவிக்க முடிகிறது. தேவன் நம்மை, இதைச் செய், செய்யாதேயெனக் கட்டுப்படுத்துபவரல்ல. ஆனால், அவருடைய வழிகாட்டல் அவர் நம்மை நேசிக்கிறாரெனக் காட்டுகின்றது.

என்னுடைய குழந்தைகள் பனியில் சறுக்கிக் கொண்டு வேகமாக ஒரு குன்றின் உச்சியிலிருந்து வருவதைக் கண்டேன். நான் அவர்களின் சிரிப்பொலியைக் கேட்டு மகிழ்ந்தேன். அவர்களின் மலர்ந்த சிவந்த முகங்களைக் கண்டேன். நான் அவர்களுக்குக் கொடுத்த எல்லைக்குள் சுதந்திரமாக விளையாடினர். இந்த நிகழ்வு, நாம் தேவனோடு கொண்டுள்ள உறவிற்கும் பொருத்தமானது. அது நம்மையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும். நான் அதில் பிரியமாயிருக்கிறேன்" (வச. 35) எனச் சொல்லும்படி செய்கின்றது.

விரிந்த படப்பிடிப்பு

அமெரிக்கா தேசத்தில், முதல் ஆப்பிரிக்கா அமெரிக்கா ஜனாதிபதியின் துவக்க விழாவின் போது, டெலிவிஷன் படப்பிடிப்பு கேமராக்கள், அந்த சரித்திர நிகழ்வினைக் காண குழுமியிருந்த இரண்டு மில்லியன் மக்களின் அழகிய காட்சியைக் காட்டியது. சி.பி.எஸ் செய்தி தொடர்பாளர் பாப் ஷீப்பர் இதனைக் குறித்து, “இந்த நிகழ்சியின் உச்சக்கட்டம் அந்த பரந்த படப்பிடிப்பிலுள்ளது? என்றார். வேறெதுவும், லிங்கன் நினைவிடத்திலிருந்து கேப்பிடல் வரை பரம்பியிருந்த இத்தனை பெரிய கூட்டத்தை இவ்வளவு துல்லியமாக எடுத்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் இணைக்கப்பட்ட, இதனையும் விட பெரிதான ஒரு கூட்டத்தினைக் குறித்த ஒரு காட்சியை வேதாகமம் தருகின்றது. “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேது. 2:9).

இது பாக்கியம் பெற்ற ஒரு சிலரின் காட்சி மட்டுமல்ல. சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலுமிருந்து கிரயம் செலுத்தப்பட்டு, மீட்டுக்கொள்ளப்பட்ட அநேகரின் காட்சி (வெளி. 5:9). இன்று நாம் இவ்வுலகம் முழுவதிலும் பரந்து காணப்படுகின்றோம். இங்கு நாம் தனித்தவரும், இயேசுவோடுள்ள தொடர்புக்காய் பாடநுபவிப்பவர்களுமாயிருக்கிறோம். தேவனுடைய வார்த்தையாகிய லென்ஸ் வழியே பார்க்கும் போது, விசுவாசத்தில் நம்முடைய சகோதர, சகோதரிகளும் இணைந்த ஒரு பெரிய கூட்டமாகப் பரந்து நின்று, நம்மை மீட்டுக் கொண்டு தம்முடைய சொந்த ஜனமாக்கிக் கொண்டவரை மகிமைப்படுத்தும்படியாகக் காணப்படுகின்றோம்.

நம்மை இருளிலிருந்து மீட்டு வெளியே ஒளியினண்டை கொண்டு வந்தவரை நாம் அனைவரும் இணைந்து போற்றுவோமாக.

ஒரு பெரிய விஷயம்

எங்களுடைய உறவினர் ஒருவருக்கு டிசம்பர் மாத வாடகையைச் செலுத்த உதவி தேவைப்பட்டது. அந்த வருட இறுதியில் அவர்கள் எதிர்பாராத சில செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அவருடைய குடும்பத்தினருக்கு இந்த தேவை ஒரு பெரிய பாரமாக இருந்தது. ஆனால், அவர்கள் தங்களுடைய சேமிப்பு எல்லாவற்றையும் தேடி எடுத்தும், தங்கள் உறவினரின் தாராள உள்ளத்தாலும், அதனை ஈடு செய்தனர். தேவன் தந்தவைகளுக்காக நன்றி செலுத்தினர்.

அவர் நன்றியறியும் வார்த்தைகளால் நிரம்பிய ஒரு நன்றி அட்டையை அவர்களுக்குக் கொடுத்தார். “நன்மையான செயல்களை செய்யும்படி தொடருங்கள், தொடர்ந்து நன்மை செய்வதை ஒரு பெரிய காரியமக நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை."

மற்றவர்களுக்கு உதவுவது தேவன் எதிர்பார்ககும் ஒரு பெரிய விஷயம். ஏசாயா தீர்க்கதரிசி இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தெரியப்படுத்துகின்றார். அந்த ஜனங்கள் உபவாசமிருக்கின்றனர், ஆனாலும் அவர்களுக்குள் வாக்குவாதங்களும், சண்டைகளும் ஏற்படுகின்றன. எனவே ஏசாயா தீர்க்கன் இதற்குப்பதிலாக, “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளியாமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்" என்கின்றார் (ஏசா. 58:6-7).

இத்தகைய தியாகம் தான் தேவனுடைய ஒளியை பிறருக்குக் கொடுக்கும். நம்முடைய காயங்களையும் குணப்படுத்தும் (வச. 8) என ஏசாயா சொல்கின்றார். குடும்பங்கள் தங்கள் உறவினருக்கு உதவும் போது, தங்களுடைய சொந்த பொருளாதாரத்தில் ஒரு கஷ்டத்தை உணர்வதால், அந்த வருடம் முழுவதும்  மேலும் சிறந்த முறையில் தங்கள் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தும் வழியைக் கண்டு கொள்வர். இதுவே நீங்கள் தாராள குணமுள்ளவர்களாயிருக்கும்படி தேவன் தரும் வாக்குத்தத்தம். “உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்" (வச. 8) முடிவில், உன் உறவினருக்குக் கொடுப்பதால் மேலும் ஆசீர்வாதத்தைப் பெறுவாய். தேவன் என்ன தருவார்? தேவன் ஏற்கனவே தனக்குள்ளதையெல்லாம் அன்பினால் உனக்குக் கொடுத்துவிட்டார்.

மனுஷரைப் பிரியப்படுத்தல்

ஒரு கல்லூரியின் ஒரு வகுப்பு, கலைசார்ந்த களப்பயணம் சென்ற போது, ஒரு மிகச் சிறந்த மாணவியை எங்களது பயிற்சியாளரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வகுப்பறையில் அவள் எப்பொழுதும் ஆறு அங்குல உயரமுள்ள செருப்புகளையே தன்னுடைய நீண்ட கால் சட்டைக்குள் அணிந்திருப்பாள். ஆனால், நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் பூட்ஸ்சுகள் அவளை ஐந்து அடிக்கும் குறைவான உயரத்தில் காட்டியது. “என்னுடைய உயரமான செருப்புகள் நான் எப்படித் தோன்ற விரும்புகிறேனோ அப்படிக் காட்டின. ஆனால், என்னுடைய பூட்ஸ்சுகள் என்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகின்றன" எனக் கூறி சிரித்தாள்.

நம்முடைய புறத்தோற்றம் நம்முடைய உண்மை நிலைமையை வெளிக்காட்டுவதில்லை. நம்முடைய இருதயமே நம்மை யாரெனக் காட்டும். வெளித் தோற்றத்தில் மிகச் சிறப்பாகக் காட்சி தரும் மதப்பற்றுடைய பரிசேயர்களுக்கும், வேதபாரகருக்கும் இயேசு ஆழமான வார்த்தைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் இயேசுவிடம், தங்களுடைய பாரம்பரியத்தின்படி அவருடைய சீடர்கள் போஜனம் பண்ணுமுன் ஏன் கை கழுவுவதில்லையெனக் கேட்கின்றார்கள் (மத். 15:1-2). இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் பாரம்பரியத்தினால் தேவனுடைய கட்டளையை மீறி நடக்கின்றீர்கள்? (வச. 3) எனக் கேட்கின்றார். அவர்கள் தங்களுடைய தகப்பனையும், தாயையும் பாதுகாப்பதற்குப்பதிலாக தங்களுக்குச் சாதகமாக ஒரு சட்டத்தை உருவாக்கிவைத்துக் கொண்டு, தங்களுடைய செல்வத்தை காத்துக் கொள்கின்றனர் (வச. 4-6). இவ்வாறு தங்கள் பெற்றோரை கனம் பண்ணாமல் ஐந்தாவது கட்டளையை மீறுகின்றனர் (யாத். 20:12) என இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.

தேவனுடைய தெளிவான கட்டளைகளிலிருந்து மீறுவதற்கு ஒரு வழிமுறையாக வெளிப்புற தோற்றத்தைக் கொள்வோமாயின். கட்டளையைத் தந்தவரை மீறுகிறவர்களாகிறோம். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும்" (மத். 15:19). தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நீதியின்படி, தேவனே ஒரு தூய இருதயத்தைத் தர முடியும்.